ஆறு வைத்தியசாலைகளுக்கு பிரதமரினால் வைத்திய உபகரணங்கள் வழங்கிவைப்பு


அமெரிக்காவின் கலிபோர்னியா வைத்திய சேவை ஆதரவு அறக்கட்டளையினால் கொழும்பு பொது வைத்தியசாலையின் வைத்திய சேவை மன்றத்திற்கு கிடைத்த வைத்திய உபகரணங்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (06) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஆறு வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டது.

ருஹுணு கெரலிய அமைப்பின் வேண்டுகோளுக்கமைய கிடைத்த இந்த வைத்திய உபகரணங்கள் தங்காலை புராண குடா வனவாச விகாரையில் வைத்து தங்காலை மற்றும் வளஸ்முல்ல ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பலந்தொட, வீரகெடிய, கடுவன மற்றும் சூரியவெவ மாவட்ட வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

நாடு முழுவதும் 150 வைத்தியசாலைகளுக்கு இந்த அறக்கட்டளையினால் இதற்கு முன்னரும் அத்தியவசிய வைத்திய உபகரணங்கள் மற்றும் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

கொழும்பு பொது வைத்தியசாலையின் வைத்திய சேவை மன்றத்தின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய ரஜவெல்லே சுபூதி தேரர், மஹரகம சிறி வஜிரஞான தர்மாயதனாதிபதி வட அமெரிக்காவின் பிரதான சங்கநாயக்கர் மஹரகம தம்மசிறி தேரர், தங்காலை புராண குடா வனவாச  விகாரையின் விகாராதிகாரி மண்டாடுவே தீரானந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதில் பங்கேற்றனர்.

மேலும் அமைச்சர் பந்துல குணவர்தன, தென் மாகாண சபையின் தலைவர் சோமவங்ஷ கோதாகொட, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் எச்.பீ.சுமனசேகர, மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் தீபிகா படபெந்திகே, தங்காலை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி விசேட வைத்திய நிபுணர் தில்கா சரணசிங்க, ருஹுணு கெரலிய அமைப்பின் தலைவர், பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிசாந்த ஜயசிங்க, சிரேஷ்ட துணை தலைவர் சட்டத்தரணி விதுர வீரகோன் உள்ளிட்ட பலரும் குறித்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.