இலங்கை அணியின் புதுமுக துடுப்பாட்ட வீரரான ஜனித் லியனகே கொவிட்-19 தொற்று காரணமாக சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா பிரீமியர் லீக்கில் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தியிருந்த இவர் சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
நிலையில் இவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி இருப்பதினால், சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இவரால் விளையாட முடியாது என்பதனை இலங்கை கிரிக்கெட் உறுதிப்படுத்திப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் கொவிட்-19 தொற்று காரணமாக ஆரம்பத்தில் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ நீக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது வீரராக ஜனித் லியனகேவும் நீக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கு பதிலாக தடையிலிருந்து மீண்டுள்ள குசல் மெண்டிஸ் மற்றும் துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் ஆகியோர் சிம்பாப்வே தொடருக்கான குழாத்தில் இணைக்கப்படலாம் என இலங்கை கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி சுப்பர் லீக் தொடருக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகின்றது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் 18 மற்றும் 21ம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், மூன்று போட்டிகளும் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
