அனுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நொச்சியாகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த வேன் ஒன்று அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வேனில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
திருமண நிகழ்வொன்றில் மணமகளை அலங்கரிப்பதற்காக வேனில் சிலர் பயணித்ததில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய சென்ற பெண்ணும் வேனின் சாரதியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாரதி நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர். விபத்தில் உயிரிழந்த பெண் மாத்தறை டிக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பஸ் கடற்படைக்கு சொந்தமானது என பொலிஸார் தெரிவித்தனர்.
