கொவிட் வைரஸ் பரவலில் இருந்து பாதுகாப்புப் பெற, மீலாத் தினத்தில் இறைவனிடம் இறைஞ்சுவோம் - மீலாத் தின செய்தியில் மொஹமட் உவைஸ் மொஹமட்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளாகிய இன்று, முஸ்லிம்கள் பொறுமையுடன் அமைதிகாத்து நடந்து கொள்ளுமாறும், கொவிட் - 19 வைரஸ் பரவலில் இருந்து நாட்டிலுள்ள சகல மக்களையும் பாதுகாக்குமாறு, எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இன்றைய தினம் துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் முஸ்லிம்களிடம் கேட்டுக்கொள்வதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமாகிய மொஹமட் உவைஸ் மொஹமட், தனது மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

   அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

   நாம் கொவிட் - 19 வைரஸ் பரவலுக்கு மத்தியில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். இன்றைய இக்கட்டான கட்டத்தில், மக்கள் மிகவும் துன்புற்று அமைதி இழந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தருணத்தில், நாம் இக்கொடிய தொற்றிலிருந்து விடுபட, அல்லாஹ்விடம் துஆப் பிரார்த்தனை புரிவதை விட வேறு வழியில்லை. நபிகள் நாயகம் 

( ஸல்) அவர்களும் கஷ்டம், பிரச்சினை, நோய் என வரும்பொழுது, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.    எனவே, நாமும் நபிகளாரின் முன்மாதிரிகளைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்.

   அத்துடன், கொவிட் - 19 வைரஸ் தொற்றின்  இரண்டாவது அலை, நம்மத்தியில் பரவியுள்ள இச்சந்தர்ப்பத்தில், நாம் அரச மற்றும் சுகாதார தரப்பினரின் வழி காட்டல்களையும், ஆலோசணைகளையும் முறையாகப் பின்பற்றி நடந்து கொள்ளவேண்டியது அவசியத் தேவையாகும். இது, நாம் இத்தொற்றிலிருந்து விடுபடுவதற்கு மிகச் சிறந்த வழியாகும் என்பது எனது கருத்தாகும்.

   கொவிட் - 19 வைரஸ் பரவல், இந்நாட்டிலிருந்தும் சகல உலக நாடுகளிலிருந்தும் மிக விரைவாக முற்று முழுதாக நீங்கவும், இத்தொற்றிலிருந்து மக்கள்  பாதுகாப்புப் பெற்று மீண்டும் சிறப்பான நிலைக்குத் திரும்பவும், இன்றைய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த மீலாத் தினத்தில், இயன்றளவு இறைவனிடம் இறைஞ்சுவோமாக!


( ஐ. ஏ. காதிர் கான் )

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.