நேற்றைய தினம் (08) கொரோனாவில் மரணித்ததாக அறிவிக்கப்பட்ட பிறந்து 20 நாளேயான கைக்குழந்தையின் உடல், சற்று முன்னர் பொரளை கனத்தை மயானத்தில் எரிக்கப்பட்டது.
எரிக்கும் இடத்திற்குச் சென்ற உறவினர்கள் சிலர் அங்கிருந்த PHI அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"குழந்தையை எரிப்பதற்கு பெற்றோர்களிடம் ஏன் அனுமதி கையெழுத்து வாங்கவில்லை...?" என, உறவினர்கள் அதிகாரிகளிடம் கேட்ட நேரத்தில், "தாம் உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் ஆனால், அவர்கள் தொலைபேசிக்கு பதிலளிக்க வில்லை என்றும் அதனால் தான், கையெழுத்துப் பெறவில்லை" என, இதன் போது அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
"பெற்றோர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் நிலையில் எப்படி இங்கு வந்து கையெழுத்திடுவார்கள்...?" என்று உறவினர்கள் கேட்ட நேரத்தில், அதற்கு "உரிய தரப்பினர் சரியான முறையில் பதிலளிக்கவில்லை" என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
"இஸ்லாமிய மார்க்கத்தில் உடல்களை அடக்கம் செய்ய வேண்டுமே தவிர, எரிக்கப்பட்ட உடல்களின் சாம்பலை எடுத்து அடக்கம் வேண்டும் என, இஸ்லாத்தில் எவ்வித வழிகாட்டல்களையும் திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் காட்டவில்லை. இதனால், தமக்கு சாம்பலும் தேவையில்லை, ஒன்றும் தேவையில்லை" எனக் கூறி, சாம்பல் எடுப்பதையும் குடும்பத்தினர் புறக்கணித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு வந்துள்ளனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )

