தலையில்லா முண்டங்கள்..!

ஆக்கம் கவிஞர் அஸ்மின்.

தலையெழுத்தை தலைகீழாய்

எழுதிவைத்த ஆண்டவனே

தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-தங்கத் தலைவரினை இழந்துவிட்டு தவிக்கின்ற எம்சமூகம் தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!

தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்

தலையாட்டி பொம்மைகள்போல் எமதினத்தை அடகுவைத்தால் தருவாரே சிலஎலும்பு அதற்கு!

தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்

தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்

தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால் தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!

தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க

தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள் தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!

தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது

தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள் தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய் தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!

தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்

தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!

கவிஞர் அஸ்மின்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.